Wednesday, 28 March 2012

A word to my Tamil People...!

மாக்க‌ளாகிப்போன‌ என் ம‌க்க‌ளே!


ஐயகோ எம் மக்காள்!

செய்வதெல்லாம் நீங்கள்!

பழி மட்டும் அடுத்தவர் மேல்,

அழுவதா சிரிப்பதா தெரியாமல் விழிக்கின்றேன்.


கூடம் மட்டுமல்ல இருட்டாகிக் கிடப்பது,

மின்சாரம் இல்லாமல்!

கூடங்குளம் வேண்டாமென்று

பிடிவாதம் பிடிக்கும் உங்கள் மனமும் தான்!

ஆரம்பிக்கும்போது அறியவிலையோ அழிவென்று?

கடலருகில் வேண்டும்,

ஆழிக்காற்று பழிக்காமல் வேண்டும்,

தட்பவெப்பமும் தகுதியாய் வேண்டுமென

எப்போது புரியும் உங்களுக்கு?

மின்சார உலை வேண்டாம் ச‌ரி,

மின்சாரத் தடையும் வேண்டாம் என்றால் எப்படி?


சாலை ந‌டுவினில் பச்சை விள‌க்குக்காய்

நிற்கையிலே அணைக்காம‌ல் 'உர் உர்' ரென்பீர்,

அலுவ‌ல‌க‌ப் பேருந்து வேண்டாமென்று

அவ‌ர‌வ‌ர் த‌ம் சிற்றுந்து கொண்டு சாலை அடைத்து

எரிபொருள் வீண‌டிப்பீர்,

மத்திய அரசின் எரிபொருள் உயர்ந்திடினும்

உங்கள் மாநிலத்தில் பேருந்து கட்டணம்

உயர்த்திட்டால் உரக்க மறுப்பீர்!

கொஞ்ச‌ம் அடுத்த‌ மாநில‌ங்க‌ளின்

விலையை ஒப்பிட்டால் ஒப்பாரியிட‌ மாட்டீர்!


மிளகாய்ப்பொடி அரைக்க மிக்ஸி வேண்டும்,

மாவரைக்க கிரைண்டர் வேண்டும்,

ஆடு மாடு இலவசமாய் வேண்டும்

விவசாயம் செய்ய மானியம் வேண்டும்

வாங்கிய கடன் கோடி தள்ளுபடி வேண்டும்

பால் கொள்முதல் விலை அதிகம் வேண்டும்

ஆனால், பால் விலை ஏறினால் பொறுத்தருள மாட்டீர்!


தமிழ் என்பார், தலை என்பார்,

தண்டவாளம் என்பார்!

தம் பேரன் இந்தி பேசி நடுவண்

அரசில் கோலோச்சக் கண்டு மகிழ்வார்,

மாநில எல்லை தாண்டினால் முழி பிதுங்கி

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது

நீ மட்டும் தான் என எப்போது உணர்ந்திடுவாய்?

மொழிப்ப்ற்றுக்கும் வெறிக்கும் வேற்றுமை

எப்போது புரிந்திடுவாய்?

ஆழப்பற்று அமைதியாக்கும்; அர‌வ‌ணைக்கும்;

அரைகுறைப்பற்று தான் ஆர்ப்பரிக்கும்! அல‌ப்ப‌ரிக்கும்!


ஆமாம், தமிழ் உங்கள் மூச்சு தான்,

ஒத்துக்கொள்கிறேன்,

வெறும் மூச்சை வைத்துக்கொண்டு

அசைவின்றி 'கோமா'வில் இருப்பீரோ?

நீ வாழ்கிறாய் என்றால்

நா, விழியுடன் காலாட‌ வேண்டும்

நீ வளர்கிறாய் என்றால்

நான்கு மொழிகள் உரையாட வேண்டும்.

கை கால் கண் தூரம் அழைத்துப் போகும்

மூச்சு? கூடவே வரும் உள்ளோடி ச‌த்த‌மின்றி.

பின் ஏன‌டா உங்க‌ள் மொழி மூச்சு ம‌ட்டும்

இத்த‌னை ச‌த்த‌ம் போடுகிற‌து,

வேறெதுவும் வேலை செய்யாம‌ல்?


அத்தனை கோடி அடித்தானா என

தேநீருடன் பேசிவிட்டு

அடுத்த வேலை செய்யக் கிளம்புவோரே,

தலைக்கு ஐநூறும் குடமும் புடவையும்

வாங்கிக்கொண்டு

உங்களையே விற்றபின் கேள்வி கேட்கும் அதிகாரம்

உனக்குக் கொடுத்ததாரிங்கே?


எப்போதாவது நினைத்ததுண்டா,

இத்த‌னை பொருட்க‌ள் வீட்டுக்கு வ‌ருகிற்தே,

இவ்வளவு செலவு செய்கின்றாரே,

எப்ப‌டி மீட்பாரோ இப்ப்ண‌த்தை,

எங்கிருந்து எடுப்பாரோ என‌?

போட்ட‌தை எடுக்கும் வியாபாரியை

வெல்ல வைத்து விட்டு

ஊழ‌ல் ஊழ‌ல் எனப் புல‌ம்புவ‌தேனோ?


எப்போதாவது நினைத்ததுண்டா,

சாதி ம‌த‌ம் இன‌ம் தெரு உற‌வு

எதுவும் பார்க்காமல் ஒரு ந‌ல்ல‌வ‌னுக்கு

ஓட்டு போடுவோமென‌?

புல்லை விதைத்துவிட்டு

நெல்லை அறுவடை செய்ய‌ நினைத்தால் எப்ப‌டி?


வெல்ல வைத்தவனை வேலை வாங்காமல்‍-

அணை கட்டுவ‌தா புதுப்பிப்ப‌தாவென‌

அர‌சுக‌ளை அம‌ர்ந்து பேச‌வைக்காம‌ல்

ஆண்டாண்டாய் ப‌ழ‌கிய‌வ‌னுட‌ன் அன‌ல் மூட்டி

ஆயுத‌மேந்துவ‌தேன்?

நீயும் நானும் அடித்துக் கொள்வ‌த்னால்

ஆதாய‌ம் ந‌ம‌க்க‌ல்ல,

உங்க‌ளால் வென்ற‌ அந்த‌ உற‌வுக‌ள் தான்

குளிர் காயும் என்று உண‌ராம‌ல் போவ‌தேனோ?


இலவசம் இலவசம் எல்லாமும் இல‌வ‌ச‌ம்!

உழைக்க‌ வேண்டாமா நீ?

பசிக்க வேண்டாமா உனக்கு?

உன் குடும்பத்துக்காய் உழைப்பதில்

அப்படியென்ன அயர்ச்சி?

சிறுகச்சேர்த்து ஒவ்வொன்றாய்

புதிதாய் வாங்கி மகிழும் அந்த

சந்தோஷ தருணங்கள் வேண்டாமா?

‌இல‌வ‌ச‌ம் 'பிச்சை'யென்று அச்ச‌மில்லையா?

உப‌யோக‌ப்ப‌டுததாத‌ அங்க‌ங்க‌ள்

'டார்வினி'ன் கொள்கைப்ப‌டி தேய்ந்துபோன‌தை

ப‌டித்த‌தில்லையா?

இப்ப‌டியே போனால்

இன்னும் நூறு ஆண்டுகளில்

உம் 'மாநிலத்தில்'

ம‌னிதர்களின் ப‌ரிமாண‌ம்

மாறுமென‌ ம‌ன‌தில் வைப்பீரோ?


ப‌ட‌ம் ந‌டித்த‌ அவ‌ர்க‌ளென்ன‌வோ

ந‌ண்ப‌ர்க‌ளாய்த்தான் இருக்கிறார்க‌ள்,

நீங்க‌ள் தான் அடித்துக்கொள்கிறீர‌க‌ள்

என் த‌லைவ‌ன் தான் பெரிதென்று!

லாப‌மென்ன‌ க‌ண்டீர் இதுவ‌ரை,

விசில‌டிச்சான் குஞ்சுக‌ளே!


எப்போதும் எதையும்

உணர்வு பூர்வமாகவே சிந்தித்து

கணநேர முடிவெடுத்து

ஓங்கார‌முடிவ‌தே வேலையாய்ப்போயிற்று!

என் செய்வது, பழகிப்போய் விட்டது

உண‌ர்ச்சிப்பிழ‌ம்பாய் உங்க‌ளை

வைத்திருந்து சுய‌ந‌ல‌த்துக்காய்

தூண்டிவிட்டு வெளிச்ச‌ம் கொள்கிறார்க‌ளே,

எப்போது புரிந்து கொண்டு

நிதான‌மாய் ந‌ட‌க்க‌ப்போகிறீர்?


உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு த‌வ‌றுசெய்துவிட்டு

நிதான‌மாய் வ‌ருத்த‌ப்ப‌ட்டென்ன‌ ப‌ய‌ன்?

உணர்ச்சிமிகு முட்டாளாய்க் கிடக்கிறீர்கள்

அதிக‌மாய் வ‌ரும் உண‌ர்ச்சி ஆர‌வார‌ம் செய்ய‌ வைக்கிற‌து

புத்தி ம‌ழுங்கி முடிவுக‌ள் த‌டுமாறுகிற‌து.

உண‌ர்ச்சிக‌ளை கொஞ்ச‌ம் ஒதுக்கி வைத்துவிட்டு

யோசியுங்க‌ள் அமைதியாக‌!


அத்த‌னை த‌வ‌றும் 'நாம்'

(ஆம், என்னையும் சேர்த்துக்கொண்டேன்,

சந்தோஷ‌ம் தானே?)

செய்துவிட்டு, அடுத்த‌வ‌ரைக்

குறைசொல்வானேன்?


ச‌ரி செய்வோம் ந‌ம்மை,

இனியொரு

விதி செய்வோம், உண்மை!